Wednesday, 18 May 2016

சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்

சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித சாட்சியங்களும் இன்றி கொல்லப்பட்டார்கள். இவ்வாறு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு இலங்கையின் சட்டத்தில் இடமில்லை. இலங்கையில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காது. இதனாலேயே சர்வதேச குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்கள் தினமும் தன்னை அலுவலகம் வந்து சந்திப்பதாகவும் அவர்களின் தேவைகள் அறிந்து, அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த கால யுத்தத்தில் யார்? யார்? கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்ற சாட்சியங்கள் இல்லை. இது குறித்து விசாரணை செய்யவேண்டும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மரபு ரீதியானது. ஒன்று சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது எங்களின் பாரம்பரிய மரபாகும். இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கூட கடந்த அரசாங்கம் தடுத்த போதிலும், புதிய அரசாங்கம் எங்கள் மனநிலையை புரிந்துகொண்டு தடை விதிக்கவில்லை. அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக தீர்வுகளை புதிய அரசாங்கம் வழங்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment